ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் செல்வராஜூ, பொருளாளர் ரக்ஷீத் ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
ஜாக்டோ-ஜியோ நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் சிலர், இன்னும் பணியில் சேரமுடியாத நிலை உள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஜாக்டோ-ஜியோவின், 9 அம்ச கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து, பரிசீலித்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம், க.பரமத்தி வட்டாரம், சி.எஸ்.ஐ., நிதி உதவிப் பள்ளி ஆசிரியர்களுக்கு, 6 மாதம் ஊதியத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு ஒன்றியத்தில், ஒரே அலுவலகத்தில், இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவற்றை மாற்றி, ஒரு வட்டார கல்வி அலுவலர் என பெயர் மாற்றம் செய்து முழு நேரம் அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.