லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை விடுவிக்கக் கோரி, அப் பள்ளி மாணவர்கள் நாமக்கல் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோட்டில் நாமக்கல் சாலையில் பச்சியம்மன் கோயில் அருகே அரசு உதவி பெறும் கலைமகள் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் சந்திரசேகரின் ஏழு மாத ஊதிய நிலுவையைப் பெற்றுத்தர பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெறும் போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தலைமை ஆசிரியரை விடுவிக்கக் கோரி அப்பள்ளி மாணவ, மாணவியர் திருச்செங்கோடு-நாமக்கல் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர காவல் துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவியரை அப்புறப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, சாலை மறியல் செய்ய மாணவர்களை தூண்டியதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (27), செங்கோட்டையன் (45) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.