பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காயின் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதன் பருப்புகளை சிறு விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்துக்கு தகுந்தாற் போல் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2,355 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.108.12-க்கும் , குறைந்தபட்சமாக ரூ.101.69-க்கும், சராசரியாக ரூ.103.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 641-க்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 828 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.102.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.93.29-க்கும், சராசரியாக ரூ.98.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.73 ஆயிரத்து 141- க்கு வர்த்தகம் நடைபெற்றது. கொப்பரை தேங்காயின் வரத்து குறைந்தும் விலை சரிவடைந்துள்ளதால் கொப்பரை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.