மருத்துவர்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வரைமுறையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் கோரிக்கை பட்டை அணிந்து பணியாற்றினர்.
மருத்துவர்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வரைமுறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். இப்போது கொண்டு வர முயற்சி செய்யும் திருத்தங்களை கை விட வேண்டும். மருத்துவ கவுன்சிலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 800 மருத்துவர்கள் கோரிக்கைள் குறித்து பட்டையை அணிந்து பணி
செய்தனர்.
போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்க நாமக்கல் கிளை தலைவர் பி.ரங்கநாதன், செயலர் ராஜா ஆகியோர் தெரிவித்தது: மருத்துவ உலகமும், மருத்துவர்களும் பல வகையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்னைகளில் முதன்மையானது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். இந்த சட்டம் பொதுமக்களை தரக்குறைவான பொருட்களிலிருந்தும், ஏமாற்றப்படுவதிலிருந்தும் காப்பதற்காக 1986இல் இயற்றப்பட்டது. துரதிருஷ்ட வசமாக மருத்துவமும், மருத்துவர்களும் பலத்த எதிர்ப்புக்கிடையே இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
அதிலிருந்து மருத்துவர்கள் படும் துயரத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஒரு சில வழக்குகள் மட்டுமே நியாயமான காரணங்களுக்காக போடப்படுகின்றன. மற்றவை பழி வாங்கும் நோக்கத்திலும், பணம் பறிக்கும் நோக்கத்திலும் போடப்படுகின்றன.
இதன் விளைவாக பல நேர்மையான மருத்துவர்கள் முக்கியமாக தனி ஒருவராக சிறிய ஊர்களில் தொழில் செய்பவர்கள் அண்மைக் காலமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை தர அஞ்சி பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதனால் கால தாமதமும், பண விரயமும் மக்களுக்கு ஏற்படுகிறது.
இந்தச் சட்டத்தில் இப்போது மத்திய அரசு சில சங்கடம் தரும் திருத்தங்களை கொண்டு வர முயற்சி செய்து அவற்றை மக்களவையில் நிறைவேற்றி மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த சட்டத்தில் மருத்துவம் சார்ந்த வழக்குகளின் இழப்பீட்டு தொகையை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். மாவட்ட நீதிமன்றமே கோடிகளில் இழப்பீட்டு தொகைக்கான ஆணை பிறப்பிக்க இது வழி வகுக்கும். இதனால் மருத்துவர்கள் ஒரே வழக்கில் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.