எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளிகளின் 17-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:
அனுபவ அறிவு என்பது வயதாகி முதிர்ச்சி அடைந்த பிறகு வந்தது என்றால் ஒருவேளை அதில் பயன் இருக்கலாம். ஆனால், பள்ளியில் படிக்கும் வயதில் கவனித்து கற்றுக் கொண்டால்தான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற பயிற்சி கிடைக்கும். பள்ளியில் படிக்கும் வயதில் அப்படி மனதை ஒருமுகப்படுத்தி பழகி விட்டால், பின்னர் வாழ்நாள் முழுதும் நமது மனதைச் செம்மையாக வைத்திருக்க முடியும் என்றார்.
விழாவில் எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளிகளின் தாளாளர் பி. செங்கோடன் தலைமை வகித்தார். எஸ்.பி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் தனபால், ஸ்ரீ எஸ்.பி.கே. பப்ளிக் பள்ளி முதல்வர் தாமோதரன் ஆண்டறிக்கை வாசித்தனர். விழாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் பள்ளியில் முதலிடம், 2-ஆம் இடம் பெற்ற மாணவர்களுக்கும் மாநில, தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் பரிசுக் கேடயங்களை சத்யராஜ் வழங்கினார் (படம்).
எஸ்பிகே ஜெம்ஸ் பள்ளிகளின் ஆண்டு மலரை சத்யராஜ் வெளியிட பள்ளியின் தலைவர் ஏ.எஸ். பிரபுகுமார் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசியதாவது:
நிகழ் ஆண்டு பள்ளியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு சிறப்புப் பயிற்சிகளான இயற்கை விவசாயம், சமையல் கலை, சாதாரண பிளம்பர், எலெக்ட்ரிக்கல் பயிற்சிகள் போன்றவை அளிக்கப்படுகின்றன என்றார். விழாவில் பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோரும், மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.