திருச்செங்கோடு நகரில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி கட்டடத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எஸ்எஸ்டி சாலை பகுதியில் தனி நபர்கள் 3 பேருக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் நகராட்சி அனுமதியின்றி 4 மாடி கட்டடம் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நகராட்சி அனுமதி இன்றி கட்டடப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் "சீல்' வைத்தனர். மேலும், இந்த முத்திரையை அலுவலக அனுமதி இன்றியோ அல்லது சட்ட ரீதியான அனுமதி இன்றியோ நீக்க முயற்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.