நாமக்கல்லில் காவலர் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரது மனைவி சாந்தி (32). இவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
சாந்தி வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் மொபட்டில் நாமக்கல் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் நாமக்கல்-திருச்செங்கோடு சாலை வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது, சாந்தி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து சாந்தி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாந்தியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.