பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.


ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
மாணவ மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து கிராமிய பொங்கல் வைத்தும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் பொங்கல் பண்டிகையை முன்னதாகக் கொண்டாடினர்.
ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. கரும்பு, மஞ்சள், கால்நடைகளுடன் கிராமிய சர்க்கரை பொங்கலிட்டு குலவை பாடல்களுடன் பொங்கல் வைத்து பள்ளிகளில் கொண்டாடினர். உறி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கும்மி பாட்டு, ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ராசிபுரம் பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கு. பாரதி தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்கத்தினர், வனிதா கிளப், ரோட்டரி கிளப் ஆப் எஜூகேசனல் சிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வித்யாநிகேதன் பள்ளி: இப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாடுகள் வைத்து படையலிட்டு, செங்கரும்பு, வாழை மரம், மா இலை தோரணங்களுடன் கும்மி அடித்து ஆடல் பாடல்களுடன் தை பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் போன்ற கிராமிய பொங்கல் விழாவைக் கொண்டாடினர். பின்னர் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விழாவில் பள்ளித் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியம், தாளாளர் எஸ். அப்துல்கரீம், செயலர் சி. சுந்தரராஜூ, துணைச் செயலர் சி. ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் ராசிபுரம் வெற்றி விகாஸ் சிபிஎஸ்சி பள்ளி, வெண்ணந்தூர் பொன்பரப்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பொங்கல் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.
வித்யா விகாஸ் பொறியியல்
கல்லூரியில்... திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி பொங்கலை கொண்டாடினர்.
கல்லூரிச் செயலர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேலு, மேலாண் இயக்குநர் ராமலிங்கம், முத்துசாமி, இயக்குநர் ஞானசேகரன், முதல்வர் (பொ) பூரணபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேஷனல் பப்ளிக் பள்ளியில்... நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சூரியனுக்கு நன்றி செலுத்துவதோடு மாடுகளுக்கும் நன்றி செலுத்தி உழவர்களால் கொண்டாடக்கூடிய பொங்கல் விழாவை மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது.
பள்ளித் தலைவர் சரவணன் முன்னிலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர். கரும்பு, மஞ்சள், மா இலை ஆகியவற்றைக் கொண்டு தோரணங்கள் கட்டி படையல் வைத்து சூரியனை அனைவரும் வணங்கினர். மாணவர்கள் பொங்கல் விழாவின் சிறப்பு குறித்துப் பேசினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com