நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125ஆவது ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் சுமார் ரூ.1 கோடி செலவில் கலையரங்கம் புதுப்பித்தல், பள்ளிக் கட்டடம் மற்றும் சத்துணவுக் கூடம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, நன்கொடையாளர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்எல்ஏவும், பள்ளியின் 125ஆது ஆண்டு அறக்கட்டளைத் தலைவருமான கே.பி.பி.பாஸ்கர் தலைமை வகித்தார். அறக்கட்டளைச் செயலர் பி.கணபதி வரவேற்றார். தொழிலதிபர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதையொட்டி, பள்ளிக்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் தலைமை ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர். மேலும், முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் அறக்கட்டளை உப தலைவர்கள் எஸ்.ரங்கநாதன், பி.மோகன், இணைச் செயலர்கள் கே.நடராஜன், கே.பாலுமணி, பொருளாளர் யு.அபுபக்கர் மற்றும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் கேசவன் நன்றி கூறினார்.