நாமக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, நடமாடும் நீதிமன்றம் மூலம் ரூ.11 ஆயிரம் அபராதமாக வெள்ளிக்கிழமை வசூல் செய்யப்பட்டது.
நாமக்கல்லில், முக்கிய சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்துப் பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வெள்ளிக்கிழமை பூங்கா சாலைப் பகுதியில் போலீஸார் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இச் சோதனையின்போது மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள், ஆவணமின்றி ஓட்டி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், செல்லிடப் பேசியில் பேசியவாறு வாகனத்தை இயக்கியவர்கள் உள்ளிட்ட 68 பேர் மீது விதிகளை மீறியதாக போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நடமாடும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 68 பேருக்கு, கூடுதல் பொறுப்பு நீதிபதி விஜயன், ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.