ராசிபுரம் அருகேயுள்ள தண்ணீர்பந்தல்காடு பகுதியில், தனியார் பால்குளிரூட்டும் நிலையத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் மூவரைத் தாக்கி பணம், செல்லிடப்பேசியைப் பறித்து சென்றது தொடர்பாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது
செய்தனர்.
தண்ணீர்பந்தல்காடு அருகேயுள்ள கும்பகொட்டாய் பகுதியில் தனியார் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த பால் நிறுவனத்தில் சக்கரவர்த்தி என்பவர் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல சனிக்கிழமை இரவு பால் நிறுவனத்தில் பணியை முடிக்கும் நேரத்தில் சக்கரவர்த்தி, அவரது நண்பர்கள் கணேசன், மணிகண்டன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பால் நிறுவனத்தில் நுழைந்து அங்கிருந்த மூவரை மிரட்டி ரொக்கம் ரூ.3 ஆயிரத்து 300, செல்லிடப்பேசி போன்றவற்றை பறித்துக் கொண்டு மூவரையும் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் துரத்தியதில், அந்த கும்பலைச் சேர்ந்த தீபக் என்பவர் பிடிபட்டார். இதனையடுத்து நிகழ்விடத்துக்கு வந்து நாமகிரிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். பிடிபட்ட சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கே.தீபக் (21) அளித்த தகவலின் பேரில் பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் குமரேசனை (24) போலீஸார் கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.