ராசிபுரம், ஜூன் 13: சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி மரக் கன்றுகள் நடும் விழாவெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிழக்கு வலசு கிராமத்தில் பசுமை மேகங்கள் அறக்கட்டளை சார்பில் அண்மையில் நடைபெற்றது.
உலகச் சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-இல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட கிழக்கு வலசு கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராம இளைஞர்களால் மரக் கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. கிராம இளைஞர்கள் 20 பேர் ஒன்றிணைந்து பசுமை மேகங்கள் என்ற அறக்கட்டளை தொடங்கி கடந்த ஓராண்டு காலமாக மரக் கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இளைஞர்கள் தங்களது கிராமத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இலவசமாக மரக் கன்றுகள் வழங்குதல், ஏரிகளை தூர் வாருதல், ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இது போன்ற பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கிராமத்தில் புங்கை, சரக்கொன்றை, அரசம், புளியம், வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.