நாமக்கல்லில் வியாழக்கிழமை வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. வானிலை மைய நிலவரப்படி, 103.6 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில், புதன், வியாழக்கிழமையன்று, வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, புதன்கிழமை, நாமக்கல்லில் 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. சாலையில் சென்றவர்கள் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குடையை பிடித்தபடியும், பெண்கள் சேலை, துப்பட்டாவால் தலையை மூடியபடியும் சென்றனர்.
வியாழக்கிழமை காலை 10 மணி முதலே வெயிலின் கொடூரம் அதிகம் இருந்தது. அனல்காற்று வீசியதால், இரு சக்கர வாகனங்களில் சென்றோர் அவதிப்பட்டனர். வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்தோர் புழுக்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு தவித்தனர். முதியோர் வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்த்தனர். வெயில் கொடுமையால் சாலைகளில் குறைந்தளவு வாகனங்களே சென்றன. சாலையோர வியாபாரிகளும் வெயிலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது விற்பனையை ஒதுக்கி வைத்து புறப்பட்டதை காண முடிந்தது. வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், நாமக்கல் பகுதி மக்கள் தவிப்புடன் உள்ளனர்.