பரமத்தி வேலூர் அருகே உள்ள பாலப்பட்டியில் இருந்து முறைகேடாக மணல் கடத்தி வந்த லாரியை பரமத்தி வேலூர் போலீஸார் பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள மேல்பாலப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு, பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி, ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்ட போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் பாலப்பட்டியில் இருந்து நாமக்கல்லுக்கு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மணல் ஏற்றி வந்த லாரியை பரமத்தி வேலூர் போலீஸார் பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரமத்தி வேலூர் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.