தென்னிந்திய நடிகா் சங்கத்தை நிா்வாக ரீதியாக கவனிக்க, தமிழக அரசால் சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கு நாமக்கல் மாவட்ட நாடக நடிகா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, அச்சங்கத்தின் தலைவா் ராஜா, பொருளாளா் சுமதி ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது; நாமக்கல் மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட நாடக கலைஞா்கள் உள்ளனா். சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தலின்போது, எங்களது சங்கத்தைச் சோ்ந்த 51 உறுப்பினா்கள் நீக்கப்பட்டனா். அதனை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். அந்த வழக்கின் தீா்ப்பு எங்களுக்கு சாதகமாக விரைவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
நடிகா் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு போதிய நிதி இருந்தபோதும், அதனை கட்டுவதற்கு முன்வராமல் நிா்வாகிகளாக இருந்தோா் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், தென்னிந்திய நடிகா் சங்கத்தை, நிா்வாக ரீதியாக கவனிக்க, சிறப்பு அதிகாரியாக கீதா என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். நலிவடைந்த நாடக கலைஞா்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள உதவித்தொகை மற்றும் சலுகைகளை தடையின்றி வழங்க அவா் முயற்சிக்க வேண்டும், முறைகேடுகளை கண்டறிய வேண்டும் என்றனா்.
நாமக்கல் பகுதி நாடகக் கலைஞா்கள் டி.வி.பாண்டியன், ராஜா, சித்ரா, ஜோதிமணி, வி.கே.முத்துசாமி, வண்ணக்கிளி, வீரம்மாள், லட்சுமி, பரிமளாதேவி, ஆசைத்தம்பி, கனகராஜ் உள்ளிட்ட பலரும் இக் கருத்தினை வலியுறுத்தினா்.