ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை மூலம் திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவுக்கு ஏழு டன் மலர்கள் திருச்செங்கோட்டில் இருந்து சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் திருப்பதி திருமலை ஸ்ரீமன் நாராயண புஷ்ப கங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், மணமுள்ள மலர்கள் தொடுத்து அனுப்பப்பட்டது.
திருச்செங்கோடு அகரமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், வரும் நவராத்திரி பிரம்மோத்ஸவ விழாவுக்கு மணமுள்ள மலர்கள், துளசி, ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை, மேரிகோல்டு என சுமார் 7 டன் பூக்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டன. அத்துடன், ரோஜா செடிகள் மற்றும் கரும்பு தென்னம்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலைகள், இளநீர் குலைகள், மாங்காய் கொத்துகள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர் தொடுக்கும் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மலர்களை தொடுத்து அனுப்பி வைத்தனர்.