பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது: 25 பவுன் தங்க நகைகள் மீட்பு
பரமத்தி வேலூர் வட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி உள்பட 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி காவல் துறை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட தனிப்படையினர் சோழசிராமணி கதவணை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் மதினாநகரைச் சேர்ந்த பூச்சிக்கண்ணன் (எ) அருண்ராஜ் (28) என்பதும், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தியதில், ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பட்டுக்கோட்டை, வாய்க்கால்தோப்பைச் சேர்ந்த முனியாண்டி (42), அதே பகுதியைச் சேர்ந்த முத்துமுருகன் (40) ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த முனியாண்டி மற்றும் முத்துமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அதில், பரமத்தி வேலூர் வட்டத்தில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கபிலர்மலை கூத்தாடி மாரியம்மன் கோயில் அருகே உள்ள சுப்பிரமணி வீட்டில் 18 பவுன் நகையும், கபிலர்மலை காந்திநகர் தனம் வீட்டில் 9 பவுன் நகையும், ஜூலை 30-ஆம் தேதி அண்ணாநகர், கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த சுப்பிரமணி வீட்டில் 9 பவுன் நகையை வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும், பாண்டமங்கலம் உரம்பூரில் நதியாவை கத்தியைக்காட்டி மிரட்டி 5 பவுன் நகையை பறித்துச் சென்றதும்
தெரியவந்தது.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின்படி, பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையில், சகாயம் தலைமையிலான தனிப்படையினர் அருண்ராஜ், முனியாண்டி, முத்துமுருகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.