புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுமேற்கொண்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளும் விசேஷ தினமாகவே கருதப்படுகின்றன. ஆவணி கடைசி சனிக்கிழமையை, புரட்டாசியின் முதல் சனியாக கருதி, பெருமாள் கோயில்களில் உற்சவ பெருவிழா நடைபெறும். புரட்டாசி மாதப் பிறப்பு கணக்குக்கு 2-ஆவது சனிக்கிழமையாக இருந்தாலும், பெருமாள் கோயில் நடைமுறைப்படி மூன்றாவது சனிக்கிழமையாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, நாமக்கல்லில் உள்ள நரசிம்மர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், அரங்கநாதர் கோயில், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், சேந்தமங்கலம் லட்சுமிநாராயணர் கோயில், மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நைனாமலை வரதராஜ பெருமாளையும், தலைமலை சஞ்சீவிராயப் பெருமாளையும் தரிசிக்க கரடு, முரடான பாறைகளின் மீது பக்தர்கள் ஏறிச்சென்று வழிபாடு செய்தனர். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, முக்கிய ஸ்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.