இரண்டு திராவிடக் கட்சிகளை நம்பி ஏமாந்த உங்களை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்தபோது தெரிவித்தார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது: பொறுத்திருந்து பொறுத்திருந்து பொங்கி எழுந்துள்ள கூட்டம் இது. நீங்கள் எல்லோரும் ஒரு புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டுள்ளீர்கள். இரண்டு திராவிடக் கழகங்களையும் நம்பி ஏமாந்த உங்களை மக்கள் நீதி மய்யம்
வரவேற்கிறது.
பா.ஜ.க. குறித்து கமல்ஹாசன் பேசுவதில்லை என்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன், இந்த இரண்டு கூட்டணிகளும் தவறுதான். இவர்களை அகற்ற வேண்டும். தேசத்தின் பன்முகத் தன்மையைக் கெடுக்க வந்துள்ள கட்சி பா.ஜ.க. இதுகுறித்து 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹேராம் திரைப்படத்தின் மூலம் எடுத்துக் கூறிவிட்டேன். திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில் பிரசாரத்துக்குச் சென்ற கனிமொழியை ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். அதிமுக அமைச்சர்களும், பா.ஜ.க. அமைச்சர்களும் ஊருக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால், எங்களுக்கு இங்கு கூடியுள்ள கூட்டம் தான் உண்மையான நல்லவர்கள் கூட்டம். அதுவும் காசு வாங்காமல் வந்த கூட்டம். உங்கள் குரலாக தங்கவேலு மக்களவையில் பேசுவார் என்றார்.