மத்தியில் பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தால், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றும். இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வளம் பெறும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.காளியப்பனை ஆதரித்து ராசிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
அதிமுக கூட்டணியை உருவாக்கியதில் மருத்துவர் அய்யாவுக்கு முக்கியப் பங்களிப்பு உண்டு. கூட்டணிக்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும்தான் காரணம். இக் கூட்டணியில் பாட்டாளிகளும், விவசாயிகளும் உள்ளனர். திமுக கூட்டணியில் மதுபான அதிபர்களும், பணக்காரர்களும் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் வளர்ச்சி, விவசாயம், பொருளாதாரம், நீர் மேலாண்மை போன்றவை குறித்து பேசி வருகிறோம். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசுகிறார்.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் பேரைச் சொல்லி நாம் வேட்பாளருக்கு வாக்குக் கேட்க முடியும். ஆனால், திமுக கூட்டணியில் அப்படி செய்ய முடியுமா? பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால், அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.
மேட்டூர் உபரி நீர் திட்டம் அதிமுக கூட்டணியால் மட்டுமே கொண்டுவர முடியும். ஏரி, குளங்கள் நிரப்பும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைச் செயல்படுத்துவோம். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 200 டி.எம்.சி. தமிழக பங்களிப்பாக வரும். இதனால் தமிழக மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். குறிப்பாக, சேலம், நாமக்கல் வளம் பெறும்.
மத்தியில் மீண்டும் மோடி பிரதமரானால், பல திட்டங்களை கேட்டுப் பெற முடியும். ஆனால், திமுக கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் எனக் கூறவில்லை. மு.க.ஸ்டாலின் விவசாயக் கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து எனக் கூறுகிறார். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வரப் போவதில்லை. அவர்களால் செயல்படுத்த முடியாது என்றார்.
இக் கூட்டத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா, பாமக மாநில துணைத் தலைவர் ச.வடிவேலன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.மோகன்ராஜு உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.