திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 3,200 மூட்டை மஞ்சள் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானது.
ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மஞ்சளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். டெண்டர் மூலம் ரூ.1.50 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.7,240 முதல் ரூ.9,266 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ.6,899 முதல் ரூ.7,509 வரையும், பனங்காளி ரகம் குவிண்டாலுக்கு ரூ.11,899 முதல் ரூ.15,209 வரையும் விலைபோனது.
ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மற்ற விற்பனை நிலையங்களை விட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு நல்ல விலை கிடைத்ததாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.