கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் சேலம் வீரர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா - சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. ஆடிப் பெருக்கு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டதால் ஏராளமானோர் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்திருந்தனர். அதையொட்டி, தமிழ்நாடு வில்வித்தை கழகம் சார்பில், செம்மேட்டில் உள்ள அரசு உண்டி உறைவிடப் பள்ளி வளாகத்தில் வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியை, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ராஜ்குமார், வில்வித்தை கழக நிர்வாகி கேசவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டியில், சென்னை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, ஒசூர், தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 10 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர், 19 வயதுக்குள்பட்டோர் என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், 10 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில், இந்தியன் அணி சார்பில் புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்திக், ரிக்கோர் அணியில் அமிழ்தன், காம்பவுண்ட் அணியில் பிறைசூடன் ஆகியார் சிறப்பிடம் பெற்றனர். தனி நபர் கோப்பைக்கான பிரிவில், இந்தியன் அணியில் சென்னையைச் சேர்ந்த கிரிதர், ரிக்கோர் அணியில், சேலத்தைச் சேர்ந்த கிருஸ்வா, காம்பவுண்ட் அணியில், நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீராம், சுழற்கோப்பை பிரிவில் சேலத்தைச் சேர்ந்த கிருஸ்வா, சிறப்புக் கோப்பை பிரிவில், சேலத்தைச் சேர்ந்த ஓம் ஸ்ரீ விஸ்வா ஆகியோரும் சிறப்பிடம் பெற்று கோப்பையை
வென்றனர்.