மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
நாமக்கல் ரெயின்போ உடற்பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதனை, தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க செயலர் அரசு, தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே.வேல், நாமக்கல் குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தலைவர் தேவியண்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
இந்தப் போட்டியில், 50 கிலோ முதல் 90 கிலோ வரை ஒன்பது பிரிவுகளாக, ஆணழகன் மற்றும் ஆணழகன் உடற்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், சேலம், நாமக்கல், திருச்சி, சென்னை, மதுரை, கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 132 பேர் கலந்து கொண்டனர். 50 கிலோ ஆணழகன் பிரிவில், நாமக்கல்லைச் சேர்ந்த ராம், 55 கிலோ பிரிவில் ராஜேஷ்குமார் மற்றும் 60 கிலோ பிரிவில் நாமக்கல்லைச் சேர்ந்த அன்பு, 65 கிலோ பிரிவில் திருச்சியைச் சேர்ந்த நிஷாந்த் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். ஆணழகன் உடற்கட்டுப் பிரிவில் சேலத்தைச் சேர்ந்த அஜித் தங்கப்பதக்கம் வென்றார். இரவு 10 மணி வரையில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நாமக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கத்தினர் மற்றும் ரெயின்போ உடற்பயிற்சி மையத்தினர் செய்திருந்தனர்.