நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகளில், 600 மாணவ, மாணவியர் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர்.
நாமக்கல் மாவட்ட யோகா சங்கம் சார்பில், நிகழாண்டுக்கான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா, நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தநாராயணன் தொடக்கி வைத்தார்.
இதில், அத்லெட்டிக் யோகா, ஆர்ட்டிஸ்டிக் சிங்கிள் யோகா, ஆர்ட்டிஸ்டிக் யோகா, ரிதமிக் பேர்யோகா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் 600 பேர் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி, 8 வயது முதல் 45 வயதுடையவர்களும், அதற்கு மேற்பட்டவர்களும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து காண்பித்தனர். இதில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட யோகா சங்கத்தின் தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ரவி, பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.