பரமத்தி வேலூர் வெற்றிலை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலையின் வரத்து குறைந்ததால், வெற்றிலையின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம்,பொத்தனூர்,வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம்,நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலை கர்நாடகம்,கேரளம்,குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 750-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிர் மார் ஆயிரத்து 850-க்கு ஏலம் போயின. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்து 250-க்கும்,கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 250-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500க்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.
ராஜா வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் வெற்றிலையின் வரத்து குறைந்துள்ளதாகவும் இதனால் வெற்றிலையின் விலை உயர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.