நாமக்கல்லில், புதன்கிழமை மாலை இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் விடாமல் பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக, காலையில் வெயில் கொளுத்தியபோதும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. அவ்வப்போது மழை பெய்தாலும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவில்லை. ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. அண்மையில் பெய்த மழையால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மற்றும் மாசில்லா அருவி, நம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தாலும் நாமக்கல்லில் மழையின் தாக்கம் ஓரளவே இருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் வானத்தில் மேகங்கள் திரண்டு, மாலை 4 மணியளவில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிந்து விழுந்தன. கடந்த ஒரு வாரமாக சரிவர மழை பெய்யாமல் ஏமாற்றி வந்த நிலையில், புதன்கிழமை பெய்த பலத்த மழையால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறே சென்றனர். காய்ந்து கிடந்த பகுதிகளில் தண்ணீர் வரத்து ஓரளவு அதிகரித்தது.
மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். நடவு செய்வதற்காக நிலத்தை உழுது போட்டவர்கள் வேளாண் பணிகளை மேற்கொள்ள புதன்கிழமை பிற்பகலில் பெய்த மழை வாய்ப்பாக அமைந்தது.