கிருஷ்ண ஜயந்தியையொட்டி, நாமக்கல் பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், வீடுகளில் சின்னஞ்சிறு குழந்தைகளின் பாதத்தை மாவில் மிதிக்க வைத்து அவற்றை வீடுகளில் பதிய வைத்தும், வெண்ணெயை குழந்தைகள் எடுத்து சாப்பிடும் வகையிலும், கிருஷ்ணர் வேடமிட்டு பாடல்கள் பாட வைத்தும் கிருஷ்ண ஜயந்தி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், நாமக்கல்-ராசிபுரம் சாலையில் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் ஜயந்தி விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவ மூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோயில் வளாகத்தைச் சுற்றி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணா, கிருஷ்ணா என முழக்கங்கள் எழுப்பினர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், பொதுமக்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.