நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் போலியான பயனாளிகள் பெயரைப் பயன்படுத்தி பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராசிபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதில் தொடர்புடையவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் உள்ள கிராம ஊராட்சிகள் மூலம், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளர்த்தி திட்டங்கள், ஏழை எளிய மக்களுக்கான உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பசுமை வீடுகள் திட்டம், தொகுப்பு வீடுகள் திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டுதல், ஆழ்துளைக் கிணறு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், கிணற்றை சுற்றி கட்டுக்கல் கட்டுதல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஆனால், கிராம ஊராட்சிகளில் இந்த திட்டங்களில் பெருமளவு முறைகேடு நடந்து வருவதாக புகார் கூறப்படுகிறது. திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் மட்டும், 18 பயனாளிகள் பெயரில் தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நிதி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக புகார் கூறப்படுகிறது. மேலும், இதே போல் ஊரக வேலை உறுதி திட்டம், குடிநீர் திட்டம், கிணறு கட்டுக்கல் கட்டுதல் போன்ற திட்டப் பணிகளில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக, பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பலரது பெயர்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் பயனாளிகள் வங்கி கணக்குக்கு நிதி வராமல் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது புகார் கொடுத்துள்ள நிலையில், திம்மநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் ராசிபுரம் டிஎஸ்பி., ஆர்.விஜயராகவனிடம், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளிக்கிழமை திரளாக வந்து புகார் அளித்தனர். இதனையடுத்து, இது குறித்து விசாரணை நடத்திட மங்களபுரம் காவல் துறையினருக்கு உதரவிடுவதாக டி.எஸ்.பி., ஆர்.விஜயராகவன் பொதுமக்களிடம் உறுதியளித்தார். மேலும், இதில் தொடர்புடையவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.