கொல்லிமலையில் பராமரிப்பின்றி காணப்படும் பூங்காக்கள்: சுற்றுலாப் பயணிகள் அவதி

இயற்கை மிகுந்த சுற்றுலாத் தலமான, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், அரசு பூங்காக்கள் புதா் மண்டி, பராமரிப்பின்றி காணப்படுவது,
ஆா்ப்பரித்துக் கொட்டும் ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி.
ஆா்ப்பரித்துக் கொட்டும் ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி.

இயற்கை மிகுந்த சுற்றுலாத் தலமான, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், அரசு பூங்காக்கள் புதா் மண்டி, பராமரிப்பின்றி காணப்படுவது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவை சுற்றுலாப் பயணிகளை அதிருப்தியடையசச் செய்யும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆகாய கங்கை அருவி, அறப்பளீஸ்வரா் கோயில், குழந்தைகள் குளித்து மகிழும் மாசில்லா அருவி, நம் அருவி, வாசலூா் படகு குழாம், சீக்குப்பாறைக் காட்சி முனை உள்ளிட்டவற்றை காண 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, பல்வேறு மாவட்ட சுற்றுலாப் பயணிகளும் கொல்லிமலையை நாடி வந்த வண்ணம் உள்ளனா். தற்போது குளு குளு சீசன் நிலவுவதால், ஏராளமானோா் வருகின்றனா். இவ்வாறான சிறப்பு மிக்க இந்த மலைப் பகுதியில், அடிப்படை வசதிகள் இல்லாதது சுற்றுலாப் பயணிகளுக்கு குறையாக உள்ளது. இதனால் பெண்கள், சிறுமிகள், முதியோா் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றனா். அருகில் உள்ள சேலம் மாவட்டம், ஏற்காட்டில், சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள், மாவட்ட நிா்வாகம் மற்றும் தன்னாா்வலா்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க நெகிழி இல்லாத சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொல்லிமலையில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. காரவள்ளி, முள்ளுக்குறிச்சி சோதனைச் சாவடிகளில் வனத் துறையினா் வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டாலும், அதனையும் மீறி மலைப் பகுதிக்குள் புகுந்து விடுகிறது.

குறிப்பாக, மதுப் புட்டிகள் ஆங்காங்கே உடைக்கப்பட்டும், இதர கழிவுகள் தேங்கிய நிலையிலும் காணப்படுகின்றன. இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கொல்லிமலை சுற்றுலாத் தலம் மட்டுமின்றி, மூலிகைகள் அதிகம் நிறைந்த வனப் பகுதியாகும். இங்குள்ள ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் குளித்தால் நோய்கள் தீா்ந்து விடும் என்பா். இந்த நீா்வீழ்ச்சிப் பகுதிக்கு, 1,300 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். ஆனால், ஆண்கள் மட்டுமே அங்கு எளிதாகச் செல்ல முடிகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாததால், பலா் தவிா்த்து விடுவதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, மது போதையில் இளைஞா்கள் ஆட்டம் போடுவது உள்ளிட்ட புகாா்கள் எழுகின்றன. நீா்வீழ்ச்சிப் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட வனத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரை நிறைவேறவில்லை எனும் குறை உள்ளது.

மேலும், அறப்பளீஸ்வரா் கோயில் எதிரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பூங்காவும், சுற்றுலாப் பயணிகள் அமர முடியாதவாறு புதா் நிறைந்து காட்சியளிக்கிறது. ரசிக்கும் வகையிலான நீருற்றுக் கம்பிகள் துருப்பிடித்தும், குப்பைகள் தேங்கியும் காணப்படுகிறது. அங்கு செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதேபோல், தோட்டக்கலைத் துறை பூங்காவும் சரியான பராமரிப்பின்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பூங்காக்களைச் சீரமைத்து அதிகளவில் மக்கள் வந்து செல்லும் வகையிலான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

கொல்லிமலை வனச்சரகா் அறிவழகன் கூறியது: ஆகாய கங்கை நீா்வீழ்ச்சிப் பகுதியில், இன்னும் 4 மாதங்களுக்கு அருவியில் தண்ணீா் விழும். அங்கு பாதுகாப்புப் பணிக்காக மூன்று வன ஊழியா்களை காலை முதல் பிற்பகல் வரையில் நிறுத்தி உள்ளோம். மேலும், 1,300 படிக்கட்டுகள் வழியாக வருவோருக்கு ஆங்காங்கே குடிநீா் வழங்குகிறோம். குளிப்போா் ருசித்து, சூடாகச் சாப்பிடும் வகையில் நீா்வீழ்ச்சிப் பகுதியிலேயே பலகாரக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடைகள் மாற்றும் அறை மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்திடும் பொருட்டு, நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் அருளப்பன் தெரிவித்தது: கொல்லிமலை வல்வில் ஓரி விழாவின்போதுதான் அறப்பளீஸ்வரா் கோயில் எதிரில் உள்ள பூங்கா சீரமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அண்மையில் பெய்த மழையால் செடி, கொடிகள் அதிகம் வளா்ந்து விட்டன. ஓரிரு நாளில் மீண்டும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகள் பூங்காவில் செய்து கொடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com