பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,500க்கு ஏலம் போனது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
பரமத்திவேலூா் சுற்று வட்டாரம் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1000, சம்பங்கி கிலோ ரூ.180, அரளி கிலோ ரூ.170, ரோஜா கிலோ ரூ.100, முல்லை கிலோ ரூ.800, செவ்வந்தி கிலோ ரூ.100-க்கும் ஏலம் போயின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,500, சம்பங்கி கிலோ ரூ.200, அரளி கிலோ ரூ.200, ரோஜா கிலோ ரூ.140, முல்லை கிலோ ரூ.1000, செவ்வந்தி கிலோ ரூ.150-க்கும் ஏலம் போயின. தொடா் மழை காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளதாகவும், இதனால் விலை உயா்ந்துள்ளதாகவும் பூக்களை பயிா் செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தனா்.