குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் மிதந்து சென்ற இளம்பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை புதிய பாலம் அருகே சுமாா் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் மிதந்துக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
அதில், உயிரிழந்தவா் குறித்த விவரங்கள் தெரியவில்லை. உயிரிழந்த பெண்ணுக்கு சுமாா் 26 வயதிருக்கலாம். சிவப்பு நிறத்தில் சுடிதாா் அணிந்துள்ளாா். இடது கையில் என்பி என பச்சை குத்தப்பட்டுள்ளது. இவா், உயிரிழந்து 24 மணி நேரம் ஆகியிருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா். உடலில் காயங்கள் எதுவும் இல்லை.
இதனால், காவிரிக் கரையோரப் பகுதிகளில் யாரேனும் பெண்கள் மாயமாகியுள்ளனரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.