நாமக்கல்லில் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சோதனையில், பேக்கரியில் இருந்து 6 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
14 வகையான நெகிழி பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி நாமக்கல் நகரில் சில கடைகளில் நெகிழி பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர்(பொறுப்பு) கமலநாதனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கடைகளில் பேரில் சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, ஆய்வாளர்கள் உதயகுமார், செல்வராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் இருந்து தடை செய்யப்பட்ட 6 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கடையின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், தள்ளுவண்டிகளில் நெகிழி பைகளுடன் வியாபாரம் செய்த 2 பேருக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.