திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின் கீழ் பொதுஇடங்களில் குப்பை போட்டால் அபராதம் விதிக்க முடியும் என்று சார் ஆட்சியர் சு.கிராந்திகுமார்பதி தெரிவித்தார்.
துப்புரவுப் பணியாளர்களுக்குத் திடக்கழிவு மேலாண்மை குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் நாமக்கல்லில் செவ்வாய்க்க்கிழமை தொடங்கியது. முகாமைத் தொடக்கிவைத்து, கிராந்திகுமார்பதி பேசியது:-
2016-ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்ட விதிகளின்படி, பொதுஇடங்களில் குப்பை போட்டால் அபராதம் விதிக்க முடியும். இதற்கு முன்னதாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எந்த வீட்டில் குப்பைகளைப் பிரித்து கொடுக்காமல் உள்ளனரோ அந்த வீட்டுக்குப் பணியாளர்கள் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் என வீட்டின் உரிமையாளருக்கு எடுத்து கூறவேண்டும் என்றார்.
இதையடுத்து, திடக்கழிவுகள் வகைகள், குப்பை உருவாகும் இடத்தில் தரம் பிரித்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகளை வகைப்படுத்துதல், மறு சுழற்சிக்கு உகந்த கழிவுகள், மறுசுழற்சிக்குப் பயன்படாத கழிவுகள் பிரித்தெடுப்பு, பிளாஸ்டிக் கழிவுகள், பீங்கான், கண்ணாடி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் பிரிக்கும்போது பாதுகாப்பான உபகரணங்கள் பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
முகாமில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சிகளைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள என 100 பேர் பங்கேற்றனர்.
முகாமுக்கு நாமக்கல் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) கமலநாதன் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, துப்புரவு அலுவலர்கள் சயத்காதர் (ராசிபுரம்), அரசுகுமார் (திருச்செங்கோடு), நாமக்கல் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.