திருச்செங்கோடு உழவர் சந்தையில் வேளாண்மை வணிகத்துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனம் மற்றும் திருச்செங்கோடு வானவில் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் இனங்களைச் சேர்ந்த இயக்குநர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது .
இக்கருத்தரங்கில் கூட்டுப்பண்ணை நிறுவனத்தில் எவ்வாறான பொருள்களை உற்பத்தி செய்வது, அதனை எவ்வாறு வணிகம் செய்வது அதில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநர் ப.சிதம்பரம், ஈரோடு துல்லிய பண்ணையத் திட்ட இயக்குநர் வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு இயக்குநருக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
குறிப்பாக அரசின் மூலம் பெறப்படும் உதவிகளை எவ்வாறு பெறுவது அதைக் கொண்டு, தொழில்கள் செய்வது, இயந்திரங்கள் தேர்வு செய்வது அந்தந்த பகுதியில் உள்ள தொழில் வாய்ப்புகள், உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்துவது, தொழில் பிரச்னை ஏற்பட்டால் எவ்வாறு சமாளிப்பது, அதேபோல் நிறுவனத்தை எவ்வாறு நஷ்டமின்றி இயக்குவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் வேளாண் வணிகத்தைச் சேர்ந்த உதவி வேளாண் அலுவலர்கள், நிறுவனத்தின் செயல் அலுவலர்கள் இயக்குநர்கள் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.