பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற வெளி மாநில இளைஞர் புதன்சந்தை அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாரதி நகரில் புதிதாக வீடு கட்டி வரும் பள்ளி ஆசிரியர், புதன்கிழமை காலை வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு புதிய வீட்டின் சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றியுள்ளார். அப்போது, அவரின் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டவர், புதன்சந்தை பகுதியில் உங்களது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் காணாமல் போனது அவருக்கு தெரியவந்தது.
புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீஸார் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர் படமுடிபாளையத்தில் உள்ள அட்டை ஆலையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் (17) என்பது தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சந்தோஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.