பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு ஏலம் போனதால், பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ.1,500-க்கும், முல்லை கிலோ ரூ.1,700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.70-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.70-க்கும், ரோஜா கிலோ ஒன்று ரூ.100-க்கும் ஏலம் போயின. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.120-க்கும் ஏலம் போயின.
பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.