வரும் 8 மற்றும் 9-ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மோட்டார் வாகனத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி தலைமை வகித்தார். மோட்டார் வாகனத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் கே.சிங்காரம் வரவேற்றார். தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து சம்மேளன மாநில பொதுச் செயலர் கே.மூர்த்தி, துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நாடு முழுவதும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8 மற்றும் 9-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் மோட்டார் வாகனத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு பங்கேற்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லாரி உரிமையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.சீரங்கன், ட்ரெய்லர் பணிமனை உரிமையாளர்கள் சங்கச் செயலர் டி. பன்னீர்செல்வம், மோட்டார் சைக்கிள் பழுதுநீக்குவோர் சங்க மாவட்டச் செயலர் கே.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.