பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற கணவன், மனைவி மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இது குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், லத்துவாடி அருகே உள்ள கீழ்ஈச்சவாரியைச் சேர்ந்தவர் மாரப்பன் (70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி எட்டம்மாள் (62). இவர்கள் இருவரும் கீரம்பூரில் உள்ள தனது மகள் புஷ்பாவை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். கீரம்பூர் அருகே வந்த போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த தனியார் பேருந்து தம்பதியினர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் மாரப்பன் மற்றும் அவரது மனைவி எட்டம்மாள் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரப்பன், எட்டம்மாள் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து நாமக்கல் அருகே உள்ள திட்டமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் ரஞ்சித்குமாரை (32) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.