குமாரபாளையம் நகரின் மையப் பகுதியில் உள்ள நீரோடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை வெட்டி அகற்றி, தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, திமுக மாவட்டத் துணைச் செயலர் எஸ்.சேகர் தலைமையில் குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதனிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு : குமாரபாளையம் நகரின் மையப் பகுதியில் ராஜம் திரையரங்கு முதல் காவிரி ஆறு வரையிலான ஓடையில் அதிகளவில் மரங்கள், செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதிலிருந்து வெளியேறும் பாம்புகள், விஷப்பூச்சிகள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நீரோடை சுத்தம் செய்யப்படவில்லை. இதனால், மழைக் காலங்களில் வரும் வெள்ளம், நீர்வழிப் பாதை தடைபட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகும் நிலை உள்ளது. எனவே, ஓடையில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை வெட்டி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு வார காலத்தில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுக இளைஞரணி சார்பில் சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கு எழுத்துப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.