தோட்டக்கலைத் துறையின் மூலம் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ள 1,945 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 10.55 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள் பெற்று நுண்ணீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்து வரும் விவசாய நிலங்களை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
ஆய்வு குறித்து ஆட்சியர் தெரிவித்தது:
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் மூலம் நுண்ணீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் என 1,945 விவசாயிகளுக்கு ரூ.10.55 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் 299 விவசாயிகளுக்கு ரூ.1.48 கோடி மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர், ரோட்டா வேட்டர் போன்ற இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தண்ணீர் இருப்பு குறைந்து கொண்டே வரும் சூழலில் அதிக பரப்பில் விவசாயம் செய்ய விவசாயிகள் நுண்ணீர் பாசன முறைக்கு மாற முன்வர வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கி.மோகன்ராஜ் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.