பரமத்தி வேலூர் பேரூராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பரமத்தி வேலூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
வேலூர் நகர வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பரமத்தி மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி மற்றும் பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி ஹசின்பானு ஆகியோர் கலந்து கொண்டு
பேசியதாவது:
உணவுச் சங்கிலி என்பது ஒவ்வொரு உயிரினங்களோடும் தொடர்புடையது. இதில் உயிரினங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் போது உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படுகிறது. நெகிழி பொருள்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள், கால்நடைகள், வன விலங்குகள் என அனைத்து தரப்பும் பாதிப்புக்குள்ளாகிறது. பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
ஆனால், உயிர் என்பது ஒரு முறை மட்டும் வருவது. அதை ஆரோக்கியமாக,பாதுகாப்பது அனைவரது கடமையாக உள்ளது. எனவே, வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லாபம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக வர்த்தகர்கள் செயல்படக் கூடாது. செய்யும் தொழிலில் தர்மம் இருக்க
வேண்டும்.
அனைவருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கடமை உள்ளது. பிற்கால தலைமுறைகளுக்காக நெகிழி தொடர்புடையவற்றை ஒழிக்க வர்த்தகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினர்.