பரமத்தி கடைவீதி பகுதிகளில் உள்ள காய்கறி, வீட்டு உபயோக பொருள்கள், தேநீர், உணவகங்கள் மற்றும் துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் திடீர் ஆய்வு செய்தார்.
பின்னர் வர்த்தக நிறுவனத்தினரிடம் துணிப் பைகளை பயன்படுத்துமாறும், உணவுப் பொருள்களை வாங்க நெகிழி பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்தும், மண்வளம் கெடுவது, மழைநீர் மண்ணில் இறங்காமல் வீணாவது குறித்தும், கழிவுநீர் கால்வாய்களில் நெகிழி பொருள்கள் தேக்கமடைந்து வருவது குறித்தும் எடுத்துக் கூறினார். பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் பகுதியில் பரமத்தி வேலூர் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தக்கூடாத பொருள்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டு பயணிகளிடையே நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆய்வின்போது பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணி, பரமத்தி வேலூர்,பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.