இறந்துபோன தனது மருமகள் சொத்துகளை அபகரிக்க முயல்வதாக ராசிபுரத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் மீது புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் புகார் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நச்சாந்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ். சுப்புலெட்சுமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
எனது மகன் நாகராஜனுக்கும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அமிர்தகடேசனின் மகள் தாரணிக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நாகராஜன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி இறந்தார். இதன்பிறகு தாரணி பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். தாரணியின் பெற்றோர் முன்னரே இறந்துவிட்டதால் அவர் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி எனது மருமகள் தாரணி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். ஆனால், எனக்குகூட தகவல் தெரிவிக்காமல், தாரணியை தகனம் செய்துவிட்டனர்.
தாரணி இறப்பு சான்றிதழில் கணவர் பெயர் ஆ. மோகன்ராஜ் என உள்ளது. பாமக பிரமுகரான இவர், தாரணியின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் இதுநடப்பதாகத் தெரிகிறது. தாரணி மர்மச்சாவு குறித்து பலமுறை ராசிபுரம் காவல் நிலையத்தை அணுகியும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதனால், 34 வயதே ஆன எனது மருமகள் தாரணியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், நாமக்கல் சார் ஆட்சியர் மூலம் தனி விசாரணை நடத்தவும் ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.