சேந்தமங்கலத்தில் இருந்து காரவள்ளி செல்லும் சாலையை ரூ.1.24 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணியை சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
சேந்தமங்கலம் காந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரம்புதூர் வழியாக காரவள்ளி சாலை செல்கிறது. இந்த சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு குறுகலான பகுதியாக இருப்பதால், சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, அவர் அந்தப் பகுதியை விரிவாக்கம் செய்ய ரூ.1.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஏற்பாடு செய்தார். அதைத் தொடர்ந்து, அதன் பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. சந்திரசேகரன் பங்கேற்று சாலை விரிவாக்கப் பணியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, ராமநாதபுரம்புதூர் பூங்கா நகர் பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது: சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் ரூ.5 கோடியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் பேரூராட்சி பகுதியில் பழுதடைந்த சாலை என்ற நிலையே இருக்காது என்றார்.
அதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட ஆர்.பி.புதூர் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. சந்திரசேகரன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில், சங்கத் தலைவர் பழனிமுத்து, செயலர் வெங்கடாசலம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.