பிறப்புச் சான்றிதழ் வழங்க தாமதம்: கைக்குழந்தைகளுடன் அரசு மருத்துவமனை முற்றுகை

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கக் கோரி, பெற்றோர் கைக்குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்ட

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கக் கோரி, பெற்றோர் கைக்குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைப் பிரிவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்த மருத்துவமனையிலேயே பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பிறந்த குழந்தைகளுக்கு, கடந்த 6 மாதங்களாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், 15-க்கும் மேற்பட்ட பெற்றோர் கைக்குழந்தைகளுடன் புதன்கிழமை மாலை பச்சிளம் குழந்தைகள் பிரிவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் தெரிவித்தது, குழந்தை பிறந்த 2 நாள்களில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. சில அரசு மருத்துவமனைகளில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால், இந்த மருத்துவமனையில் 6  மாதங்களுக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கும் இன்னும் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனர்.
குழந்தை பிறந்த நேரத்தில் பிரசவ வார்டில் மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவமனை ஊழியர்கள் பிரசவித்த தாய்மார்களை கீழ்தரமாக நடத்துகின்றனர். பணி செய்வதற்காக ஊழியர்கள் ரூ.500 வரை லஞ்சம் கேட்கின்றனர் என்று குற்றம்சாட்டினர். அங்குள்ள ஊழியர்கள் சமாதானப்படுத்தியும் அவர்கள் தங்களுடைய  கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி தர்னாவில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அங்கு வந்த ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் எல்.உஷா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறப்புச் சான்றிதழ் கிடைக்கவும், பிற குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com