பரமத்தி வேலூர் வட்டம், வெங்கமேட்டில் உள்ள நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொப்பரைத் தேங்காய் ஏலத்தில் கொப்பரையின் விலை தொடர்ந்து உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்குக் கொண்டு வருகின்றனர்.
இங்கு தரத்துக்குத் தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,320 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.118.10 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 112.89 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 117-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 807-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,803 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 119.12 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 108.90 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 117.12 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 178-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
கொப்பரைத் தேங்காயின் வரத்து அதிகரித்தும் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.