கோகுல்ராஜ் கொலை வழக்கு:  ஜன.18-க்கு ஒத்திவைப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை இரண்டாவது

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக சாட்சியம் அளித்தார். இதையடுத்து,  வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 
 சேலம் மாவட்டம்,  ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை,  நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி  சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது.  கோகுல்ராஜின் தாய் சித்ரா,  அண்ணன் கலைச்செல்வன்,  கோகுல்ராஜின் கல்லூரித் தோழி சுவாதி,  அவரது தாய் செல்வி  உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
 இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்,  அவரது கார் ஓட்டுநர் அருண் உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.  தொடர்ந்து 2 ஆவது நாளாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.  அப்போது சம்பவம் தொடர்பாக காவல் துறையால் கைது செய்யப்பட்ட 11 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மணிவண்ணன் அடையாளம் காட்டினார்.
 இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார்.   அன்று யுவராஜ் தரப்பு வழக்குரைஞர் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. 
 மேலும், அன்று அரசுத் தரப்பு சாட்சியான நாமக்கல் நல்லிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.  கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் நல்லிப்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.  இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com