நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், மதுப்பழக்கம், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேரணிக்கு தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அர.அருளரசு, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு, மதுப் பழக்கம், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பேரணியில் கே.எஸ்.ஆர்.கல்லூரி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப் பணி மாணவர்கள் கலந்து கொண்ட மாபெரும் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். இந்தப் பேரணியானது திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி திருச்செங்கோடு பேருந்து நிலையம் - ஈரோடு சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
இந்தப் பேரணியில் கள்ளச்சாராயம் அருந்துவதால் கண் பார்வை பாதிக்கப்படும், உயிரிழப்பு ஏற்படும், போதையில் வாகனம் ஓட்டக்கூடாது, கள்ளச்சாராயம் ஓர் உயிர்க்கொல்லி, கள்ளச்சாராயத்தை ஒழிப்பதே நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளார் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) சு.செந்தில், துணைக் காவல் கண்காணிப்பாளர் எம்.சண்முகம், உதவி ஆணையர்(கலால்) எம்.இலாஹிஜான் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.