எதிர்காலத்தில் சமுதாய உணர்வுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்கும் சிந்தனை ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் என ஈரோடு மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் குறிப்பிட்டார்.
ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பள்ளியின் தலைவர் க. சிதம்பரம் தலைமை வகித்தார். கல்வி இயக்குநர் பி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் எம். ஷோபா வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகள், தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய த. ஸ்டாலின் குணசேகரன் மேலும் பேசியது:
இன்றைய மாணவர்களுக்கு மதிப்பெண்களைவிட வாழ்வின் மதிப்புகளை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். சமுதாய சீர்கேடு அதிகரிக்க வாழ்வியல் முறைகளை சொல்லித் தராததே காரணம்.
தாய்மொழியில் நல்ல புலமை பெற்றால், பிற மொழிகளை கற்பது சுலபம். மதிப்பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட புரிந்து படிக்க வேண்டும். தாய்மொழியில் புலமை பெற்றால், நல்ல எழுத்தாளராக, கவிஞராக வரமுடியும். பாடப்புத்தக்கத்தை தவிர, பிற நல்ல புத்தகங்களையும் பயில பெற்றோர்கள் வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். இதற்கு இல்லந்தோறும் நூலகம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் இதனை முதலில் செய்ய வேண்டும். உலக நிகழ்வுகளை ஆசிரியர்கள் அறிந்திருப்பது அவசியம்.
ஆசிரியர்கள் மாணவர்களால் மதிக்கத்தக்கவர்களாகவும், முழு தகுதி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நாட்டின் விடுதலை, தியாகம் போன்றவற்றை சொல்லித் தருவதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். எதிர்காலத்தில் சமுதாய உணர்வுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்கும் சிந்தனை ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.
விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.