நாமக்கல்லில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் தீவனம் அளித்தல் குறித்து இலவசப் பயிற்சி முகாம் நாமக்கல்லில் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என். அகிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 21-ஆம் தேதி காலை 9 மணிக்கு கறவை மாடு வளர்ப்பு மற்றும் தீவனம் அளித்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
முகாமில் கறவை மாடுகளில் சினைப் பருவ அறிகுறிகள், கனநீர் மாறுபாடுகள், நோய்க் கிருமிகளின் தாக்குதல் மற்றும் தீவன குறைபாடுகளால் ஏற்படும் தற்காலிக மலட்டுத் தன்மை குறித்தும் நிரந்தர மலட்டுத் தன்மை குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
சினைப் பருவ அறிகுறிகள் மற்றும் சினைப் பருவத்துக்கு வராத மாடுகளை சினைப் பருவத்துக்கு வரவைப்பது பற்றிய வழிமுறைகள் குறித்தும், தீவன வகைகள், தீவன மேலாண்மை, பசுந்தீவன மேலாண்மை, உலர்தீவன மேலாண்மை, அடர்தீவன மேலாண்மை, மரபுசாரா பொருள்களை பயன்படுத்தி தீவன மேலாண்மை குறித்த பயிற்சி விரிவாக அளிக்கப்படும்.
இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286- 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 21-ஆம் தேதி காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.